சிறுபடங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்

சிறுபடங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்

Published on

சென்னை: விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரகாரன் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்.6ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது கூறியதாவது:

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம். யார் மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும். அதை ‘இறுகப்பற்று’ படத்தில் அழகாகச் செய்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ்.

கடந்த சில நாட்களாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையும் சிறு பட்ஜெட் படமாகத்தான் பார்க்கிறேன். சின்ன படங்களும் சினிமாவைத் தாங்கிதான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்கென வியாபாரம் இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறுபடங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு. அதுக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் சமீபத்தில் நடிகர் விஷால் சொன்னது எச்சரிக்கை உணர்வால்தான்.

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு கூறினார்.

இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு வெற்றியை பரிசாகக் கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை காட்டுகிறேன். இதற்கு பிறகு கதைகளில் நான் அருவா, கத்தி எடுக்கணுமா, வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in