

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' திரைப்படம், செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
'வேலைக்காரன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
2016-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளிலேயே, இப்படம் 2017-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், மே 1-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், ஜூன் மாதம் பல்வேறு பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. இதனால் விநியோகஸ்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 29-ம் தேதிக்கு மாற்றியுள்ளார்கள். மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
'வேலைக்காரன்' படத்தை முடித்துவிட்டு, பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.