தமிழ்த்திரை உலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்த்திரை உலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார்.

மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. “கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது” என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிநிமிடங்களை அவருடன் பணியாற்றிய கமலேஷ் பகிர்ந்துள்ளார். | தொடர்புடைய செய்தி > “ஆசுவாசப்படுத்துவதற்காக வெளியே வந்தார்” - மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த கமலேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in