

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்தில் நாடோடிபழங்குடியினரை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஜெய்பீம்’ படத்தில் தங்களது சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி நாடோடி பழங்குடியினர் சமூகத்தின் மாநில தலைவர் கே.முருகேசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துநடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பாக கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க அறிவுறுத்திஇருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.