

சென்னை: ‘மாமன்னன்’ படத்தின் 50-வது நாளையொட்டி இயக்குநர் மாரிசெல்வராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் 50-வது நாள். பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும் அதற்குள் அறத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த அளப்பரிய வெற்றியை சமர்பிக்கிறேன் . “உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” என பதிவிட்டுள்ளார். மேலும், அத்துடன் தன் அம்மா, அப்பாவுடன் இருக்கும் ஓவியம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், உருவான படம் ‘மாமன்னன்’. நேற்று (ஆகஸ்ட்17) இப்படத்தின் 50ஆவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் “மாமன்னன் 50வது நாள். உதயநிதி அழைத்து என் கடைசி படம் எடுத்து தாருங்கள் என்றார். அவர் கேட்டது போல் நல்ல படத்தை எடுத்து தந்து விட்டேன்.
அதற்கு ஒத்துழைத்த படக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. ஒன்றே ஒன்று தான் சொல்ல ஆசை, நான் பாடிக்கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம் ஆனால் அதை என் வாழ்நாள் முழுதும் பாடிக்கொண்டிருப்பேன், என் வயிற்றிலிருந்து குடலை உருவி அதை யாழாக மாற்றி தெருத்தெருவாக மீட்டி வருவேன், உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் நன்றி” என பேசியது குறிப்பிடத்தக்கது.