'ஜெயிலர்' வெற்றி பெற திருப்பரங்குன்றம் கோயிலில் மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: ‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சனம் செய்தும் ரஜினி ரசிகர்கள் வழிப்பட்டனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படம் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்தப் படத்தைப் பார்க்க ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.

மதுரையில் சாதாரணமாகவே ரஜினியை அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது படம் வெளியாவதால் நகர் முழுவதும் ஜெயிலர் படத்தை வாழ்த்தியும், அந்த படம் வெற்றி பெற விரும்பியும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதோடு ஜெயிலர் படம் வெற்றிப்பெற மதுரையில் உள்ள முக்கிய கோயில்களில் ரஜினி ரசிகர்கள் நேர்த்திக்கடனும், சிறப்புப் பூஜைகளும் செய்து வருகின்றனர்.

இன்று மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள வெயில் காலத்து அம்மன் கோயிலில் ரஜினி ரசிகர் சரவணன் தலைமையில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அவர்கள் அங்கபிரதட்சனம் செய்தும் வழிப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in