

கார்த்தி நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவு பெற்று, இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
ஜெய்ஸால்மர், பூஜ் மற்றும் சென்னை பகுதிகளில் நீண்ட நாட்களாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்றது. தற்போது அதன் மொத்த படப்பிடிப்பும் முடிவுபெற்று இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. விரைவில் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் முடிவு பெறுவதைப் பொறுத்து படத்தின் வெளியீட்டை முடிவு செய்யவுள்ளார்கள்.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. இதனை சூர்யாவின் '2டி' நிறுவனம் தயாரிக்கவுள்ளது.