

சென்னை: ‘வடசென்னை 2-ம் பாகம்’ நிச்சயம் உருவாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அட்டைகளை வழங்கி ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களைக் கூறினார்.
அவர் பேசும்போது, “உங்களுக்கும் சரி, எனக்கும் சரி, சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் சாப்பிட்டு வாழ்வது அரிதான காரியம். ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் தானாக கிடைக்கும். ஆழமான தூக்கம் அவசியம்” என்றார். பின்னர் சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 'வடசென்னை 2-ம் பாகம் நிச்சயம் வரும். அதற்கு முன் இன்னும் 2 பட வேலைகள் இருக்கின்றன” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறனுக்குத் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி, மூத்த பத்திரிகையாளர்கள், புத்தகங்கள் பரிசாக வழங்கி கவுரவித்தனர்.