‘லியோ வரட்டும், பிறகுதான் விஜய் 68 அப்டேட்’ - இயக்குநர் வெங்கட் பிரபு கறார்

‘லியோ வரட்டும், பிறகுதான் விஜய் 68 அப்டேட்’ - இயக்குநர் வெங்கட் பிரபு கறார்
Updated on
1 min read

சென்னை: யெல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்துள்ள படம், ‘ரெஜினா’. சுனைனா நாயகியாக நடித்துள்ள இந்த கிரைம் த்ரில்லர் படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவாசெல்லதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சதீஷ் நாயர் இசை அமைத்துள்ள இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டார். இயக்குநர் எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சித்ரா லட்சுமணன், சக்தி பிலிம்பேக்டரி சக்திவேலன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது கூறியதாவது:

நானும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷும் கல்லூரி நண்பர்கள். ஆனால் அவருக்குள் இவ்வளவு இசை ஆர்வம் இருக்கும் என எனக்கு தெரிந்ததில்லை. என் அப்பாவுக்கு சதீஷ்தான் செல்லப்பிள்ளை. கோவை செல்லும் போது சதீஷுடன் தான் நேரத்தைச் செலவிடுவார். இந்தப் படத்தை இயக்கியுள்ள டொமின் டி’சில்வா, சதீஷின் முதல் இசை ஆல்பத்தையும் இயக்கி இருந்தார். ஆனால் இவர்கள் இப்படி ஒரு படம் எடுப்பார்கள் என அப்போது எதிர்பார்க்கவில்லை. சுனைனா இதில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சவாலான, துணிச்சலான கதாபாத்திரம் அவருக்கு. இந்தப் படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கூறினார். அவரிடம், ‘விஜய் 68’ பட அப்டேட் குறித்து கேட்டபோது, “லியோ படம் முதலில் வரட்டும். பிறகு அப்டேட் வரும். அதற்கு முன் ஏதாவது சொன்னால், ஏன் ஒவ்வொரு பங்ஷனாக போய் படம் பற்றி பேசுகிறாய் என விஜய் திட்டுவார்” என்றார்.

ரெஜினா வரும் 23-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in