32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’
Updated on
1 min read

நடிகர் மம்மூட்டி - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பனி  இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் மம்மூட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் மம்மூட்டியுடன் இந்த்ரன்ஸ், கிரேஸ் ஆண்டனி, ஸ்ரீஷ்மா சந்திரன் மற்றும் சீனத் ஏபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

"எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 8-வது படைப்பாக அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘பாதயாத்ரா’ திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று மம்மூட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தின் கதைக்களம் குறித்து எதையும் படக்குழு வெளியே கசிய விடவில்லை என்றாலும், அடூர் கோபாலகிருஷ்ணனின் முந்தைய படங்களைப் போலவே இதுவும் ஒரு யதார்த்தமான, கலை நயம் மிக்கப் படைப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in