

பிரபல கன்னட நடிகரான சுதீப், தமிழில் புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நான் ஈ படம் மூலம் பான் இந்தியா நடிகரான அவர் நடித்து மேக்ஸ், மார்க் ஆகிய படங்கள் தமிழிலும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டு ஆனதை அடுத்து ரசிகர்கள், திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அழகான, திரைப்பட உலகில் மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள இந்நேரத்தில், என் மனம் நன்றியால் நிரம்பி இருக்கிறது.
கனவுகளும் சந்தேகங்களும் கொண்ட ஒரு சிறுவனாகத் தொடங்கிய இப்பயணம் இன்று இங்கு வந்து நிற்கிறது. இதற்கு காரணம் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான். நீங்கள் தான் என் பலம், என் ஊக்கம், தொடர்ந்து பணியாற்றுவதற்கான காரணமும் நீங்கள்தான்.
தங்கள் கதைகளில் என்னை நம்பி இணைத்துக்கொண்ட இயக்குநர்கள் மற்றும் திரை எழுத்தாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி”என்றார். திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்த அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.