

மலையாள இயக்குநரான சனல் குமார் சசிதரன், ‘செக்ஸி துர்கா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றார். இவர் மீது, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர், பாலியல் தொல்லை புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சனல்குமார் சசிதரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தனது பெயருக்குக் களங்கம் விளைக்கும் வகையிலும் மிரட்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி அவர் மீது 2024-ம் ஆண்டு மீண்டும் புகார் அளித்தார் அந்த நடிகை. கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சனல்குமார் சசிதரன் தொடங்கியுள்ளார்.
தன் மீது நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் சதி இருப்பதாகக் கூறும் எனது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்; ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும்; அந்த அறிக்கையில் கூறப்படும் பாலியல் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தனது கோரிக்கைகள் தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல என்றும், திரைப்படத் துறையையும் சமூகத்தையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்றும் சனல்குமார் சசிதரன் கூறியுள்ளார். தனக்குக் கிடைத்த கேரள மாநில விருதுகளையும் வைத்துக்கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.