

நடிகர் விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘ரணபாலி’. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். இதில் ‘மம்மி’ மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியாக நடிக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப் பதிவு செய்யும் இப்படத்துக்கு அஜய்– அதுல் இசை அமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பில் தனக்கு 6 கேரவன்கள் மற்றும் 50 உதவியாளர்கள் வேண்டும் என்று விஜய தேவரகொண்டா கேட்டதாகவும் அவரின் இக்கோரிக்கைகளால் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகியதாகவும் செய்திகள் பரவின.
இதற்குப் பதிலளித்த விஜய தேவரகொண்டா தரப்பு, “இது முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற தகவல். தயாரிப்பாளர்களுடனும், தயாரிப்பு குழுவுடனும் எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இல்லை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.