

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்குச் சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
எட்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, டிச. 8-ம் தேதி எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளிகள் என அறிவித்தார் நீதிபதி, 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நடிகர் திலீப்பை விடுவித்தார். பின்னர் டிச.12ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த 6 பேருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட நடிகை தனது ஏமாற்றத்தைத் தெரிவித்திருந்தார். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் வி.அஜய்குமார் அளித்த சட்ட ஆலோசனையின் அடிப்படையில், மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்ததும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.