

மலையாளத்தில் வெளியான ‘என்னு நின்டே மைதீன்’, ‘கூடே’ படங்களுக்குப் பிறகு பிருத்விராஜ், பார்வதி திருவோத்து இணைந்து நடித்துள்ளப் படம், ‘ஐ, நோபடி’. நிசாம் பஷீர் இயக்கியுள்ள இப்படம் வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிருத்விராஜ், பார்வதியின் திறமையைப் புகழ்ந்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பார்வதி, புத்திசாலித்தனமான நடிகை. அவருடைய நடிப்புத் திறமையை மட்டும் குறிப்பிடவில்லை. ஒரு கதையில் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை வைத்து மட்டுமே அவர் அந்த கதையை மதிப்பிடுவார் என்று நினைக்கவில்லை.
ஒரு கதைக்களம், எப்போது சிறந்த படமாக மாறும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அதில் தானும் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம், அந்தப் படத்தை இன்னும் சிறப்பானதாக மாற்ற முடியும் என்பதையும் அவர் அறிவார். எனக்கு அவரை நீண்ட காலமாகத் தெரியும், சினிமாவை அந்தளவுக்கு ஆழமாகப் புரிந்து வைத்திருப்பதால், எதிர்காலத்தில் அவர் சிறந்த இயக்குநராக மாறுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.