கோல்டன் குளோப் | “கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி” - கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நாட்டுக் கூத்து பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு "உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி" என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் திரைபடம் உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி. நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் இந்த விருது மிக முக்கிய விருதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 1962 முதலில் பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் முதல் விருதை வென்ற இந்திய சினிமா என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் படக்குழு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2009-ல் ஏ.ஆர்.ரஹ்மான், பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தார்.

நாட்டுக் கூத்து பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்தப் பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்தப் பாடலை பாடி இருந்தனர். சுமார் 3.36 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்தப் பாடலில் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பீட்டுகள் அனல் பறக்கும் ரகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in