

புரி ஜெகநாத் இயக்கத்தில், விஜய தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்து வெளியான படம் ‘லைகர்’. பான் இந்தியா முறையில் தயாரான இதை புரி ஜெகநாத், நடிகை சார்மி தயாரித்திருந்தனர். படம் தோல்வி அடைந்தது.
இந்தப் படத்துக்கு அரசியல்வாதிகள் சிலர், தங்கள் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ததாக பக்கா ஜட்சன் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். அந்நிய செலாவணி சட்டத்தை மீறி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெறப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, புரி ஜெகநாத், சார்மி ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன், ஹைதராபாத் அமலாக்கத் துறையினர் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.