Published : 26 Oct 2022 05:17 PM
Last Updated : 26 Oct 2022 05:17 PM

ரூ.16 கோடி பட்ஜெட்... ரூ.200 கோடி வசூல் - ‘கேஜிஎஃப்’ படத்துக்கு அடுத்து ‘காந்தாரா’ கலெக்‌ஷன்!

'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுக்க ரூ.200 கோடியை வசூலித்து, கன்னட சினிமாவின் அதிகபட்ச வசூலில் 'கேஜிஎஃப்' சீரிஸ் படங்களுக்கு அடுத்த படியான இடத்தை பெற்றிருக்கிறது.

’‘கேஜிஎஃப்' திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் கன்னட மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டது.

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம்

உலகமெங்கும் இதுவரை ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. வெறும் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.200 கோடியை வசூலித்திருக்கிறது. கன்னடத்தில் 'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப் 2' படங்களுக்குப் பிறகு ரூ.200 கோடி வசூலைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் படம் 'காந்தாரா' என கூறப்படுகிறது.

'கேஜிஎஃப்' ரூ.250 கோடியையும், 'கேஜிஎஃப் 2' ரூ.1200 கோடியையும் தாண்டி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த படியான இடத்தில் 'காந்தாரா' படத்தின் வசூல் இடம்பெற்றுள்ளது. மேலும், கிச்சா சுதீப்பின் 'விக்ராந்த் ரோணா' இந்த வசூலின்படி ரூ.160 கோடி வசூலுடன் இந்தப் படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x