மக்களுக்கு பிடிக்கும் நல்ல படங்களில் இனி நடிப்பேன் - விஜய் தேவரகொண்டா உறுதி

மக்களுக்கு பிடிக்கும் நல்ல படங்களில் இனி நடிப்பேன் - விஜய் தேவரகொண்டா உறுதி
Updated on
1 min read

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் இவர் சமீபத்தில் நடித்த படம் 'லைகர்'. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா முறையில் ரூ.125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'லைகர்' வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் முதல்நாள் வசூலாக உலகம் முழுவதும் படம் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை கடுமையாக சரிந்து விஜய் தேவரகொண்டா கரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. படத்தின் வெளியீட்டின் முன்பு ‘லைகர் படத்தை புறக்கணியுங்கள்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டானபோது, ‘யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்’ என்று விஜய் தேவரகொண்டா பேசியது, அதற்கு தியேட்டர் அதிபர் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது எனப் பல சர்ச்சைகள் எழுந்தன.

இதன்பின் அந்த தியேட்டர் அதிபரை நேரில் சந்தித்து விஜய் தேவரகொண்டா, காலில் விழுந்து ஆசி பெற்றார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அதோடு, தனது சம்பளத்தில் ஒருபகுதியை 'லைகர்' படத்தின் இணை தயாரிப்பார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கவும் செய்தார் விஜய்.

இதனிடையே, இனி நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. விருது விழா ஒன்றில் பேசிய அவர், "நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் ஒவ்வொருவரும் மிக மோசமான நாட்களை வாழ்வில் கடந்திருப்போம். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே வாழ்க்கையில் முக்கியமானது. இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன். இதைச் சொல்லவே இந்த விழாவில் பங்கேற்றேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in