Published : 05 Jul 2022 04:20 PM
Last Updated : 05 Jul 2022 04:20 PM

“யாரையும் புண்படுத்த அப்படிச் சொல்லவில்லை” - ஆர்ஆர்ஆர் பட சர்ச்சை குறித்து ரசூல் பூக்குட்டி

'ஆர்ஆர்ஆர்' படத்தை தன்பாலின ஈர்ப்பாளர் படம் என ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி கூறியது சர்ச்சையான நிலையில், 'யாரையும் புண்படுத்த அப்படி கூறவில்லை' என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா சினிமாவாக வெளியான இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனைப் படைத்தது.

இதையடுத்து ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. இந்நிலையில், முனிஷ் பரத்வாஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இரவு 'ஆர்ஆர்ஆர்' என்ற குப்பை படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன்'' என பதிவிட்டிருந்தார்.

இதற்கு 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி, ''தன்பாலின ஈர்ப்பாளர்கள் கதை' என பதிலளித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

மேலும், ஆலியாபட் படத்தில் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார் எனவும் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துக்கு 'ஆர்ஆர்ஆர்' பட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரசூல் பூக்குட்டியின் கருத்தை ட்விட்டரில் மேற்கொள்காட்டி கருத்தை பதிவிட்டுள்ள பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா, ''ஆர்ஆர்ஆர்' தன்பாலின ஈர்ப்பாளர் பற்றிய படம் என நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது மோசமான விஷயமா? இதை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்? உங்களின் இந்த கருத்தால் ஏமாற்றமடைகிறேன்'' என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள ரசூல் பூக்குட்டி, ''இதனை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். அப்படியே இருந்தாலும் அது தவறில்லைதான். நான் என் நண்பருக்கு பதிலளித்தேன். பொதுவெளியில் கிண்டலாகப் பேசுவதைதான் தெரிவித்தேன். இதை நீங்கள் இவ்வளவு கவலைக்குரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதைத் தெரிவிக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x