Published : 07 May 2022 06:32 PM
Last Updated : 07 May 2022 06:32 PM

‘கேஜிஎஃப்’ உறுதுணை நடிகர் மோகன் ஜூனேஜா மறைவு

'கேஜிஎஃப்' மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த கன்னட உறுதுணை நடிகர் மோகன் ஜுனேஜா உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மோகன் ஜூனேஜா. பிறகு இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் உறுதுணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் ஷங்கர் நாக்கின் கன்னட படமான 'வால் போஸ்டர்' மூலம் அறிமுகமானார்.

உறுதுணை மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் அறியப்பட்டவர் மோகன் ஜூனேஜா. கன்னட திரைப்படமான 'செல்லட்டா' படத்தில் அவரது நடிப்பு புகழ்ந்து பேசப்பட்டது. அந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

மேலும், அவர் புனித், தர்ஷன், அம்பரீஷ், உபேந்திரா மற்றும் சிவராஜ்குமார் உட்பட பல சூப்பர் ஸ்டார்களுடன் பணியாற்றியுள்ளார். இதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் படமான 'கேஜிஎஃப் 2' மற்றும் 'கேஜிஎஃப் 1' ஆகிய இரு பாகங்களிலும் அவர் நடித்துள்ளார். அந்தப் படத்தில், 'இடியவே இடிக்க பாத்தாணுங்க' என்ற வசனம் மூலமாக கடைக்கோடி ரசிகனுக்கும் அறிமுகமாயிருந்தார் மோகன் ஜூனேஜா. அதேபோல, ''கேங்க கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தைய வர்றவன் மான்ஸ்டர்" என அவர் பேசும் வசனம் பெரும் புகழை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோகனின் மரணம் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோகனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x