Published : 03 May 2022 03:47 PM
Last Updated : 03 May 2022 03:47 PM

பிரபல நடிகை உயிருக்கு ஆபத்து - இயக்குநர் புகார்


பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தான் வலுவாகச் சந்தேகிப்பதாக பிரபல மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

90களில் மலையாளத்தின் முன்னணி நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர். இவர் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். அதனால் தமிழ் நன்றாகப் பேசக் கூடியவர். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுர’னில் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். நடிகர் திலீபைத் திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தார். இரண்டாம் வரவிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார். ‘நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கி’ல் திலீப் குற்றம் சாட்டப்பட்டார். அதில் மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாகச் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் அந்த வழக்கில் மஞ்சு சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியாரின் இந்த அவல நிலைக்குக் காரணம் அந்த வழக்குதான் எனத் தான் சந்தேகிப்பதாகவும் சனல் கூறியுள்ளார். ‘செக்சி துர்கா’ படத்தைப் பார்த்துவிட்டுச் சேர்ந்து படம் செய்ய விருப்பம் இருப்பதாக மஞ்சு தெரிவித்தார். அப்படித்தான் ‘கயற்றம்’ என்னும் சினிமா உருவானது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாலயத்தில் நடந்தது. படக் குழுவினர் எல்லோரும் கூடாரம் அமைத்துத்தான் தங்கியிருந்தோம். மஞ்சுவும் அவரது மேலாளர்கள் பினீஷ் சந்திரன், பினு நாயர் இருவரும் ஒரே கூடாரத்தில் தங்கினார்கள். அது பட்ஜெட்டுக்காக என நினைத்தேன். பின்னால்தான் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் மஞ்சு இருக்கிறார் எனத் தெரியவந்தது. சினிமா சம்பந்தமாக மஞ்சுவைச் சந்தித்தபோதெல்லாம் இவர்கள் கூட இருப்பார்கள். இவர்கள் இல்லாமல் மஞ்சுவைப் பார்க்கவே முடியாது. எனது படத்தையும் வெளியிடுவதிலும் தொடர்ந்து தடங்கல். மஞ்சுவைச் சந்திக்க கோட்டயம் சென்றேன். சந்திக்க வந்த விஷயத்தை பினுவிடம் சொன்னேன். அவர் பினீஷிடம் கூட்டிச் சென்றார். அருகில் இருந்த மஞ்சு ‘வெளியில் வந்து பேசுகிறேன்’ என்றார். ஆனால், அவரைக் காரில் ஏற்றிக் கூட்டிச் சென்றுவிட்டார்கள்” என சனல் சொல்லியுள்ளார்.

இது சம்பந்தமாக மஞ்சுவின் நண்பர்கள் பலருக்கும் தொடர்பு கொண்டதாக சனல் கூறியுள்ளார். மேலும் பெண் நடிகர்கள் சங்கமான ‘வுமன் இன் சினிமா கலக்டிவ்’க்கும் மின்னஞ்சலும் செய்துள்ளார். ஆனால், ஒரு முன்னேற்றமும் இல்லை எனச் சனல் அந்தக் குறிப்பில் ஆதங்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x