ரஜினி சாரை வைத்து படமெடுக்க ஆசை: இயக்குநர் ராஜமௌலி

ரஜினி சாரை வைத்து படமெடுக்க ஆசை: இயக்குநர் ராஜமௌலி
Updated on
1 min read

ரஜினியை வைத்து படமெடுக்க ஆசை இருப்பதாக இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நேற்று ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் பல்வேறு தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இதில் ராஜமௌலி பேசியதாவது:

நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படித்த பள்ளிக்கு வந்தால் பயமாக இருக்கும். அது போலத் தான் சென்னை எனக்கு. சினிமா கற்றுத் தந்தது சென்னை தான். அந்த பயம் எனக்கு இருக்கிறது. ஒரு பெரிய படம் என்பதை எடுக்கும்போதே யாரும் நிர்ணயிக்க முடியாது.

நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம். இறுதியில் ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்.

ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும். கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘பாகுபலி’ எல்லோருக்கும் பிடிக்க காரணம் அதன் மொழி அல்ல, அதன் எமோஷன் தான். ‘ஆர்ஆர்ஆர்’ ‘பாகுபலி’யைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும். ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தை தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகத்தான் இருந்தது. ஆனால் என் கதை அதை செய்திருக்கிறது.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில் தான் முடிவு செய்தேன். இந்த இரு கேரக்டர்களும் வரலாற்றில் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவே கேட்க அதிசயமாக இருந்தது. உண்மையில் அவர்கள் சந்தித்ததில்லை. சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப்படம்.

இவ்வாறு ராஜமௌலி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in