

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் படத்தின் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
சோனாக்ஷி சின்ஹா, இயக்குநர் அனுராக் கஷ்யாப், லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'அகிரா' என்ற இந்திப் படத்தை இயக்கி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனைத்து படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் வெளிவந்த 'மெளனகுரு' படத்தின் ரீமேக் தான் 'அகிரா' என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மகேஷ்பாபு தமிழில் நடிக்கும் முதல் படமாக இப்படம் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'குஷி' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் 'குஷி 2' பணிகளைது துவங்க இருப்பதால், இப்படத்தில் நடிப்பது குறித்து எஸ்.ஜே.சூர்யா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனால், ஒப்பந்தமாகி விடுவார் என்கிறது அவருக்கு அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.