Published : 14 Nov 2021 11:29 AM
Last Updated : 14 Nov 2021 11:29 AM

டிக்கெட் கட்டண குறைப்பு விவகாரம்; ஆந்திர அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நோக்கமில்லை - ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

ஆந்திர அரசின் டிக்கெட் கட்டண குறைப்பு விவகாரத்தில் நீதிமன்றம் செல்லும் நோக்கம் தங்களுக்கு இல்லை என டிவிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இப்படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கான டிக்கெட் விலையை ஆந்திர அரசாங்கம் அதிரடியாக குறைத்தது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு ரூ 10 முதல் ரூ. 20 என்றும், நகராட்சிகளுக்கு ரூ.30 முதல் ரூ.70 என்றும், மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.40 முதல் ரூ.120 என்றும் கட்டணம் நிர்ணயித்தது. ஆந்திர அரசின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தலால் திரைப்படங்கள் வெளியாகாத சூழலில் இந்த கட்டணக் குறைப்பு தங்களை பெரிதும் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்துள்ள டிவிவி நிறுவனம் ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்லவிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் இது குறித்து டிவிவி நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

டிக்கெட் கட்டண குறைப்பு எங்கள் படத்தை பெரிதும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால் நீதிமன்றம் செல்லும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மதிப்புக்குரிய ஆந்திர முதல்வரை அணுகி அவரிடம் எங்களது சூழலை விளக்கி ஒரு இணக்கமான தீர்வை கோரவுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x