Published : 29 Oct 2021 02:46 PM
Last Updated : 29 Oct 2021 02:46 PM

புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்: கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி

பெங்களூரு

புனித் ராஜ்குமார் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பல்வேறு கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்படுகிறார்.

இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

கன்னடத் திரையுலகில் மூத்த நடிகரான மறைந்த ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் புனித் ராஜ்குமார். இவருடைய மனைவியின் பெயர் அஸ்வினி. த்ரிதி மற்றும் வந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய அண்ணன் சிவராஜ்குமாரும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x