போதை பொருள் விவகாரத்தில் ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணாவிடம் விசாரணை

போதை பொருள் விவகாரத்தில் ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணாவிடம் விசாரணை
Updated on
1 min read

போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்த 12 பேருக்கு ஹைதராபாத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

அதன்படி கடந்த 3-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் 10 மணி நேரமும், நடிகை சார்மி கவுரிடம் 8 மணி நேரமும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் 6 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், நடிகர் நந்துவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இவரை, போதைகடத்தல் மற்றும் விற்பனையாளர் கெல்வினுடன் சேர்ந்து அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரை அமலாக்கப் பிரிவினர் நேற்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகுபலி புகழ் நடிகர் ராணா, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரானார்.

அவரிடம் வங்கி கணக்கு விவரங்கள், பண பட்டுவாடா, எஃப்கிளப்புக்கு செல்வது, கெல்வினுடன் உள்ள நெருக்கம் போன்றவிவரங்கள் கேட்டறியப்பட்டுள்ளன. அவர் கொண்டு வந்த வங்கி ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கி உள்ளார். கடந்த 2017-ல்நடைபெற்ற போதை பொருள் விற்பனை குறித்த விசாரணையில் ராணாவின் பெயர் இல்லை. தற்போது நடிகர் ராணாவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும்இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in