அமிதாப் பச்சனுக்கு க்ளாப் அடித்த பிரபாஸ்

அமிதாப் பச்சனுக்கு க்ளாப் அடித்த பிரபாஸ்
Updated on
1 min read

அமிதாப் பச்சன் நடித்த முதல் காட்சியை க்ளாப் அடித்து பிரபாஸ் தொடங்கி வைத்தார்.

'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்', 'சலார்' உள்ளிட்ட படங்களில் பிரபாஸ் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து 'மஹா நடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் பிரபாஸ் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்துக்கு இது 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட மாதங்களாகவே நடைபெற்று வந்தன.

இன்று (ஜூலை 24) குரு பூர்ணிமாவை முன்னிட்டு, இந்தப் படத்தின் படப்பிடிப்பைப் படக்குழு தொடங்கியுள்ளது. முதல் நாளில் அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சியைப் படமாக்கினார்கள். இதனை க்ளாப் அடித்து பிரபாஸ் தொடங்கிவைத்தார்.

அமிதாப் பச்சன் நடித்த காட்சியைத் தொடங்கி வைத்தது குறித்து பிரபாஸ் கூறுகையில், "இந்த குரு பூர்ணிமா நாளில், இந்திய சினிமாவின் குருவுக்கு க்ளாப் அடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம்" என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமிதாப் பச்சன் முதல் காட்சி தொடக்கம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், " 'ப்ராஜக்ட் கே' படத்தின் முதல் ஷாட். தேசம் முழுவதும் உலகம் முழுவதும், பாகுபலி மூலம், சினிமாத் திரையில் மாய அலைகளை உருவாக்கிய உச்ச நடிகர் பிரபாஸ் க்ளாப் போர்ட் அடிக்க, அதன் பின்னால் இருப்பது எவ்வளவு பெரிய கவுரவம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு 'ப்ராஜக்ட் கே' என்று பணிபுரிவதற்கான தலைப்பாக வைத்துள்ளார்கள். இது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 20-வது படமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in