Published : 19 Jul 2021 03:59 PM
Last Updated : 19 Jul 2021 03:59 PM

மீண்டும் இசையமைப்பாளரான தர்புகா சிவா

தான் இயக்கி வந்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால், மீண்டும் இசையமைப்பாளராக மாறியுள்ளார் தர்புகா சிவா.

சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தர்புகா சிவா. அதற்குப் பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா தான். அந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இசையமைப்பாளராக மட்டுமன்றி நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். 'முதல் நீ முடிவும் நீ' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தின் பணிகளில் இருந்ததால், இசையமைக்க வந்த வாய்ப்புகள் எதையும் தர்புகா சிவா ஒப்புக் கொள்ளவில்லை.

'முதல் நீ முடிவும் நீ' பணிகள் முடிவடைந்திருப்பதைத் தொடர்ந்து தர்புகா சிவா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறேனா என்று தொடர்ந்து என்னிடம் கேட்பவர்களுக்காக - ஆம், என்னுடைய 'முதல் நீ முடிவும் நீ' படத்துக்கான பணிகள் முடிந்து விட்டன. தற்போது படங்களுக்கு இசையமைக்க தயாராக உள்ளேன். எனவே உங்களிடம் சுவாரஸ்யமான கதை இருந்தால், என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்"

இவ்வாறு தர்புகா சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x