தொற்று உறுதி, நலமாக இருக்கிறேன்: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ட்வீட்

தொற்று உறுதி, நலமாக இருக்கிறேன்: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ட்வீட்
Updated on
1 min read

கோவிட்-19 தொற்றுப் பரிசோதனையில் தனக்குத் தொற்று உறுதியாகியிருப்பதாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ட்வீட் செய்துள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பல நடிகைகள், நடிகர்கள் கடந்த வாரங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில், வீட்டுத் தனிமையில் உள்ளனர். இந்த நிலையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள என்.டி.ஆர், ”எனக்குக் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தயவுசெய்து கவலை வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என் குடும்பத்தினரும், நானும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். கடந்த சில நாட்கள் என்னுடன் நேரடித் தொடர்பில் வந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். அவரோடு சேர்ந்து தில் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

கரோனா இரண்டாவது அலை நெருக்கடியால் இந்தப் படத்தின் வேலைகள் தடைபட்டு, திட்டமிடப்படிருந்த அக்டோபர் மாத வெளியீடும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in