வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் இணைகிறது மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் கூட்டணி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் இணைகிறது மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் கூட்டணி

Published on

த்ரிவிக்ரம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. பாடல்கள், காட்சியமைப்புகள் எனத் தெலுங்குத் திரையுலகில் மாபெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து த்ரிவிக்ரம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகன் தொடர்பாகப் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், எதுவுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், கொரட்டலா சிவா இயக்கவுள்ள படத்தில் ஒப்பந்தமானார் ஜூனியர் என்.டி.ஆர்.

இந்நிலையில், மீண்டும் மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் இணையப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டணி 'அத்தடு' மற்றும் 'கலேஜா' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நிலையிலிருந்த இந்தக் கூட்டணி, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் 28-வது படமாக இது உருவாகவுள்ளது. ஹாரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in