புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகரை நேரில் சென்று சந்தித்த பவன் கல்யாண்: இணையத்தில் குவியும் பாராட்டு

புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகரை நேரில் சென்று சந்தித்த பவன் கல்யாண்: இணையத்தில் குவியும் பாராட்டு
Updated on
1 min read

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் ஒருவரைத் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பவன் கல்யாண் ஜனசேனா என்கிற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனது ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலருக்கும் தொடர்ந்து நல உதவிகளைச் செய்து வருகிறார்.

தற்போது உடல் நலம் குன்றிய தனது ரசிகர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் பவன் கல்யாண். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்கலா கிராமத்தில் வசித்து வரும் பார்கவா என்பவர் தீவிரமான பவன் கல்யாண் ரசிகர். 19 வயதான பார்கவாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக்கையிலேயே பார்கவா நாட்களைக் கழித்து வருகிறார். பார்கவாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பவன் கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து, அவரது குடும்பத்தினருடன் உரையாடி, ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும், பார்கவாவின் மருத்துவச் செலவுகளுக்கு ரூ.5 லட்சமும், ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் அன்புப் பரிசாகத் தந்துள்ளார். பவன் கல்யாணின் இந்தச் செயலை அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in