Published : 11 Oct 2020 12:40 PM
Last Updated : 11 Oct 2020 12:40 PM

ஃபகத் பாசிலின் புதிய காரால் உருவான சர்ச்சை: நடிகை அஹானா பதிலடி

ஃபகத் -நஸ்ரியா ஜோடி வாங்கிய விலையுயர்ந்த சொகுசுக் காரால் உருவான சர்ச்சைக்கு நடிகை அஹானா பதிலடி கொடுத்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஃபகத் பாசில். இயல்பான நடிப்பு, தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவற்றால் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் ஃபகத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது மனைவி நஸ்ரியா. இவரும் ‘நேரம்’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

திருமணத்துக்குப் பிறகு பெரிய அளவிலான படங்களில் நஸ்ரியா நடிக்கவில்லையென்றாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். தன்னைப் பற்றியும், தன் கணவரைப் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் நஸ்ரியா - ஃபகத் இருவரும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள போர்ஷே 911 மாடல் சொகுசுக் காரைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ளனர். இந்தக் காரை இந்தியாவிலேயே முதல் முறையாக இவர்கள்தான் வாங்கியுள்ளனர்.

இந்தத் தகவலை ஃபகத் பாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். இதனால் ஃபகத் மற்றும் நஸ்ரியாவுக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஆனால், சமூக வலைதளங்களில் வழக்கம்போல நெட்டிசன்கள் பலரும் அவர்கள் இருவரையும் பின்னூட்டங்களில் திட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டனர்.

உலகமே கரோனா தொற்றினால் அவதிப்பட்டு வரும் வேளையில் இவ்வளவு விலை உயர்ந்த ஒரு கார் தேவைதானா, இதற்குப் பதில் இல்லாதவர்களுக்கு அந்தப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்து உதவியிருக்கலாமே என்ற ரீதியில் பின்னூட்டங்கள் சரமாரியாக வந்தன.

நெட்டிசன்களின் இந்த விமர்சனத்துக்கு ஃபகத் - நஸ்ரியா ஜோடி இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. எனினும் நடிகை அஹானா கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்குப் பதில் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''மக்கள் தங்கள் பொறாமையை அடக்க முடியவில்லையென்றால், அது இப்படித்தான் விஷம் போல வெளியே வந்து விழும். இதுபோன்ற பின்னூட்டங்களைப் பதிவிடுபவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இங்கே தெளிவாகத் தெரிவது என்னவென்றால் அடுத்தவர் வாழ்வில் ஒரு நன்மை நடக்கும்போது வரும் பொறாமையே அன்றி வேறில்லை. அடுத்தவர்களுக்காக சந்தோஷப்பட முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழல்களில் உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்''.

இவ்வாறு அஹானா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x