மகேஷ் பாபு படத்தில் இணைந்த ‘தபங் 3’ நடிகை

மகேஷ் பாபு படத்தில் இணைந்த ‘தபங் 3’ நடிகை
Updated on
1 min read

மகேஷ் பாபு தயாரிக்கும் புதிய படத்தின் நாயகியாக சாய் மஞ்ச்ரேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபங் 3’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாய் மஞ்ச்ரேகர். தற்போது இவர் மகேஷ்பாபு தயாரிக்கவுள்ள புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

26/11 மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர் கேரளாவைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘மேஜர்’ என்ற பயோபிக் திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் நடிகர் மகேஷ்பாபு. சசி கிரண் டிக்கா இயக்கி வரும் இப்படத்தில் அதிவி ஷா, சாய் மஞ்ச்ரேகர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகிறது.

இதுகுறித்து சாய் மஞ்ச்ரேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''26/11 மும்பை தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்ட என்எஸ்ஜி கமாண்டோவான மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அடுத்த மாதம் படக்குழுவினருடன் இணைந்து படப்பிடிப்புக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்.

‘மேஜர்’ படத்தின் கதை என்னிடம் சொல்லப்பட்டதும் நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். தென்னிந்தியப் படங்களில் நடிக்க நான் எப்போதுமே தயார்தான்''.

இவ்வாறு சாய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in