தங்கக் கடத்தல் பின்னணியில் மலையாள திரையுலகினர்: பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகக் கண்டுபிடித்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தை வாங்க வந்திருந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமாரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சரித் குமார் அளித்த தகவலின் படி கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ், அவரின் நண்பர் சந்தீப் நாயர் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாசில் பரீத் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார்.

இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் மலையாள திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான சியாத் கோகர் மலையாளத் திரையுலகினர் மீது தங்கம் கடத்தல் தொடர்பாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாசில் பரீத் கடத்தலின் மூல கிடைத்த பணத்தை மலையாள படங்களில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க சட்டவிரோத செயல்களின் மூலம் கிடைத்த பணம் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னணியில் சில நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த தங்க கடத்தல் குறித்து நன்கு தெரியும். மலையாள சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்''.

இவ்வாறு சியாத் கோகர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in