

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சாஹோ' படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 'ராதே ஷ்யாம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
'மஹாநடி' என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நாக் அஷ்வின் இயக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக பிரபாஸ் - நாக் அஷ்வின் படம் அமைந்துள்ளது.
இதனிடையே, பிரபாஸ் படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் நாளை (ஜூலை 19) காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. அது நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.