ரசிகர்களின் விருப்பத்தை வழிமொழிந்த ஏ.ஆர்.ரஹ்மான்

ரசிகர்களின் விருப்பத்தை வழிமொழிந்த ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம் குறித்த ரசிகர்களின் விருப்பத்தை வழிமொழிந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்தது இவர் தான். இந்தப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். சுஷாந்த்தின் நடிப்பில் 'தில் பெச்சாரா' என்ற படம் மே மாதம் வெளியாவதாக இருந்தது.

முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் சைஃப் அலி கான், சுஷாந்த் சிங், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை.

தற்போது ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சுஷாந்த் சிங் ரசிகர்களோ அவருடைய இறுதிப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். #DilBecharaOnBigScreens என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கருத்துகளைக் கொட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக வெளியான செய்தியை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் ஆசையை அவர் வழிமொழிந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in