

முன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர் என்று ராணா கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் பிரபலத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். 'பாகுபலி' திரைப்படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்ஜை திருமணம் செய்துகொள்ள விருப்பதாக ராணா தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்தார். மே 21-ஆம் தேதி அன்று குடும்பத்தினர் மற்றும் பங்கேற்க, இவர்களின் நிச்சயார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை ராணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். திருமணத் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம், நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராணா நேரலையில் பேசினார். இதில் ராணா எப்படி மிஹீகாவை சந்தித்தார், எப்படி திருமணம் பற்றிக் கேட்டார் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி லட்சுமியின் கேள்விகளுக்கு ராணா பதிலளித்தார்.
அந்தப் பேட்டியில் திருமண முடிவு குறித்து முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் என்று ராணாவிடம் லட்சுமி மஞ்சு நையாண்டியாகக் கேட்டதற்கு, "நண்பர்களிடமிருந்து செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. எனது முன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்" என்றார். மேலும் நிச்சயதார்த்த விழாவில் நண்பர்கள் இல்லாத குறையை உணர்ந்ததாகவும் கூறினார்.