தெலுங்குப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நாளை முதல் தொடங்க முடிவு

தெலுங்குப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நாளை முதல் தொடங்க முடிவு
Updated on
1 min read

தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் எப்போது தொடங்குவது உள்ளிட்டவை குறித்த ஆலோசனை சிரஞ்சீவி வீட்டில் இன்று நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தெலுங்குத் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக 'Corona Crisis Charity’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் உதவிகள் செய்து வருகிறார். இதற்கு முன்னணி நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.

தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க அரசு அனுமதியளித்துவிட்டது. இதனால் தெலுங்குத் திரையுலகில் எப்போது பணிகள் தொடங்குவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சிரஞ்சீவி வீட்டில் இன்று நடைபெற்றது.

இதில் முன்னணி தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, இயக்குநர்கள் ராஜமெளலி, த்ரிவிக்ரம், கொரட்டலா சிவா உள்ளிட்டோருடன் தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச யாதவும் கலந்து கொண்டார். இதில் அனைவரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இறுதியாக இறுதிக்கட்டப் பணிகளை நாளை (மே 22) முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (மே 21) மாலை வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தெலுங்குத் திரையுலகினர் ஒன்றிணைந்து எப்போது தொடங்கலாம், எப்படி தொடங்கலாம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றைக் கேட்டுள்ளது தெலங்கானா அரசு.

அதை முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச யாதவ் உறுதியளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in