Published : 19 May 2020 02:39 PM
Last Updated : 19 May 2020 02:39 PM

'ராம்' கைவிடப்பட்டதா? - இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம்

'ராம்' கைவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து 'த்ரிஷ்யம்' என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'ராம்'. வெளிநாட்டுக் கதைக்களம் என்பதால் பெரும் பொருட்செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டு டிசம்பர் 16-ம் தேதி படப்பூஜை நடைபெற்றது.

இதில் மோகன்லாலுக்கு நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கேரளாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டது படக்குழு. அதற்குப் பிறகு வெளிநாடுகளில் கரோனா ஊரடங்கால் 'ராம்' படக்குழுவினரால் திட்டமிட்டவாறு படப்பிடிப்பைத் தொடங்க முடியவில்லை.

இதனிடையே முழுக்க கேரளாவிலேயே படப்பிடிப்பு செய்யும்வகையில் வேறொரு படத்தை இயக்கவுள்ளார் ஜீத்து ஜோசப் எனத் தகவல் பரவியது. இதை வைத்து 'ராம்' படம் கைவிடப்பட்டதாகப் பலரும் தெரிவித்தார்கள்.

'ராம்' கைவிடப்பட்டதாக வெளியான வதந்திக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

"மோகன்லால் நடிக்கும் 'ராம்' படத்தைக் கைவிட்டுவிட்டு அடுத்த படத்தைத் திட்டமிடுகிறேன் என்று கடந்த சில நாட்களாகவே அழைப்புகளும், செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. கோவிட் கிருமி தொற்றுப் பரவல் காரணமாக 'ராம்' படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கரோனா நெருக்கடி குறைந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும்.

உலகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்திய ஒருசில இடங்களில் கேரளாவும் ஒன்று என்பதால், இங்கு படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சாத்தியத்தை மனதில் வைத்து, கேரளாவிலேயே மொத்தம் நடக்கும் ஒரு திரைப்படத்தையும் நான் யோசித்து வருகிறேன். இதற்கு 'ராம்' திரைப்படம் கைவிடப்பட்டது என்று அர்த்தம் அல்ல. தற்போதைய சூழல் காரணமாக தாமதமாகியுள்ளது. அவ்வளவுதான்".

இவ்வாறு இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x