

கரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், சினிமா தொழிலாளர்கள் நிவாரணத்துக்கு 25 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார் ஜுனியர் என்.டி.ஆர்
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 719 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை பவன் கல்யாண் 1 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1கோடி ரூபாய், பிரபாஸ் 1 கோடி ரூபாய், ராம்சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாய் எனத் தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ஜுனியர் என்.டி.ஆர் 50 லட்ச ரூபாய் அளித்துள்ளார் . மேலும் 25 லட்ச ரூபாயை தெலுங்கு திரையுலகின் பணியாளர்களின் நிவாரணத்துக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். முன்னதாக, தெலுங்கு திரையுலகின் பணியாளர்களுக்கு நிதியுதவியாக சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.