

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகளிலும், வெளிநாட்டிலும் நடைபெற்றது.
இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெறவில்லை. ஆனால், இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோதே ஜூலை 30, 2020-ல் வெளியீடு எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ராம்சரணுக்குக் காயம், ஜூனியர் என்.டி.ஆருக்குக் காயம், ஹாலிவுட் நடிகையின் விலகல் என பின்னடைவைச் சந்தித்தது.
இதனால், படத்தின் வெளியீட்டுத் தேதி மாறலாம் எனத் தகவல் வெளியானது. படக்குழுவினரோ இதில் உண்மையில்லை, திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவித்தது. ஆனால், தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் படப்பிடிப்பு முடிவு பெறாத சூழல் நிலவுவதால் வெளியீட்டுத் தேதி மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எந்தத் தேதி என்பதைப் படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது. சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.