

அமிதாப் பச்சன் தான் தனது நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி என்று கூறியுள்ளார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.
கர்னூல் பகுதியில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 'சைரா நரசிம்ம ரெட்டி' என திரைப்படமாக உருவாகிறது. இதில் சிரஞ்சிவீ நாயகனாக நடிக்கிறார். இதில் நயன்தாரா, தமன்னா, ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நரசிம்ம ரெட்டியின் ஆசான் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய சிரஞ்சீவி, "அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான். அவர் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாது. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவருக்கு நான் நிறைய கடன் பட்டிருக்கிறேன்.
என் ஆசான் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அது ஒரு விசேஷமான கதாபாத்திரம். கண்டிப்பாக அமிதாப் தான் வேண்டும் என்றார். அதனால் அமிதாப் அவர்களை அழைத்து எனது ஆசான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஒரு வாரம் தான் ஆகும் என்றேன். அவர் உடனே சரி என்றார். இந்த இந்தியா மெகாஸ்டாருக்கு என் இதயம் நன்றி கூறியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபர் 2ஆம் தேதி அன்று, தெலுங்கு தவிர இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.