

பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார்.
'கைரளி' என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான். இவர் 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா', 'தட்டத்தின் மறையத்து', 'ஒரு வடக்கன் செல்பி' , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' போன்ற மலையாள படங்களுக்கும், ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் 'கோல்மால் 4' படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1979-ம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'MV கைரளி' பற்றிய படம் தான் 'கைரளி' ஆகும். தேசிய விருது பெற்ற சித்தார்த்தா சிவா இதற்கு திரைக்கதை எழுதவுள்ளார்.
நிவின் பாலியின் ஜே.ஆர். பிக்சர்ஸ் உடன் இணைந்து 'ரியல் லைப் ஒர்க்ஸ்' நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளா, கோவா, டெல்லி, குவைத், ஜெர்மனி உள்ளிட்ட இடங்களில் நடத்த தீர்மானித்துள்ளது படக்குழு. டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.