ஐமேக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி 2: ராஜமெளலி மகிழ்ச்சி

ஐமேக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி 2: ராஜமெளலி மகிழ்ச்சி
Updated on
1 min read

'ஐமேக்ஸ்' திரையரங்குகளில் 'பாகுபலி 2' வெளியாகவுள்ளதால் இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'-ல் விடை தெரியவிருக்கிறது.

மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 16-ம் தேதி காலையில் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழி ட்ரெய்லரும் சேர்த்து சுமார் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இந்தியாவில் உருவான படங்களின் ட்ரெய்லர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்தது என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'பாகுபலி 2'.

மேலும், இப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கிற்கு ஏற்றவாறு மாற்றி திரையிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 'தூம் 4' மற்றும் 'பேங் பேங்' படங்கள் மட்டுமே ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு ஏற்றவாறு தயார் செய்து வெளியாயின. தென்னிந்தியாவிலிருந்து ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகும் முதல் படமாக 'பாகுபலி 2' அமையவுள்ளது.

இது குறித்து இயக்குநர் ராஜமெளலி, "’பாகுபலி’ படங்களுக்கு மக்களின் கவனம் இந்தளவுக்கு கிடைக்க காரணம், ஒவ்வொரு படத்தையும் நாங்கள் பிரம்மாண்டமாக திட்டமிட்டு உருவாக்கிய விதமே.

'பாகுபலி 2' ஐமேக்ஸ் பதிப்பில் திரையிடப்படுவதை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன். அது படத்தின் பிரம்மாண்டத்தையும், ஆன்மாவையும் இன்னும் மேம்படுத்தும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in