Last Updated : 03 Mar, 2017 04:23 PM

 

Published : 03 Mar 2017 04:23 PM
Last Updated : 03 Mar 2017 04:23 PM

ராமின் இயக்கத்தில் மம்முட்டிக்கு கதாநாயகியாக திருநங்கை

நீல நிறத்தில், அரைத்தோளில் ஆடை அணிந்து நடிகையைப் போல இருக்கிறார் திருநங்கை அஞ்சலி அமீர். இப்போது அவர் நடிகையைப் போல அல்ல. நடிகையேதான்.

ராமின் இயக்கத்தில் 'பேரன்பு' என்னும் படத்தில் மம்முட்டியின் கதாநாயகியாக நடிக்கிறார் திருநங்கை அஞ்சலி. சிறு வயதில் இருந்தே, குறிப்பாக சிறுவனாக இருக்கும்போதே அவருக்கு நடிப்பு என்பது பெருங்கனவாக இருந்தது.

அந்தக் கனவை நனவாக்க ஆசைப்பட்டவர் முதலில், இன்னொரு கனவை நனவாக்கினார். ஆம், பெண்ணாக மாறினார்.

பிறக்கும்போது ஆணாக இருந்தவர், இரண்டு வருடங்களுக்கு முன்னால் 'பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை' செய்து கொண்டார். இதுகுறித்து 'தி இந்து'விடம் அவர் கூறும்போது, ''இந்தியாவில் முழுநீள திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெகுசில திருநங்கைகளில் நானும் ஒருவராகி விட்டேன். 'பேரன்பு' படத்தில், என்னுடன் மற்றொரு நடிகையும் நடிக்கிறார் என்றாலும் எனக்கு முதன்மை பாத்திரம் கொடுத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதற்கு மம்முட்டியே முழுக் காரணம். அவர்தான் என்னை இயக்குநர் ராமுக்குப் பரிந்துரை செய்தார்.

தொலைக்காட்சி செய்தியில் என்னைப் பற்றி அவருக்குத் தெரியவந்தது. அப்போது மிகுந்த சிரமத்தில் இருந்தேன். நான் திருநங்கை என்பது தெரியவந்ததும், நான் நடித்த தொலைக்காட்சி சீரியல் ஒன்று ஒளிபரப்புக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் அதை இப்போது நினைத்தால் சந்தோஷப்படுகிறேன். இல்லையென்றால் எனக்கு மம்முட்டிக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே மம்முட்டியை ரசித்திருக்கிறேன். வேஷம் படத்தின் படப்பிடிப்பின் போது அவரை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன். என்னுடைய பள்ளி நாட்களில் உறவினர் வீட்டுக்குச் சென்ற காலங்களில் இவை நடந்தது.

சுமார் 10 வயது ஆன போதுதான், மற்ற சிறுவர்களிடம் இருந்து நான் வேறுபட்டிருப்பதைக் கண்டேன். என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் பெண்களாகவே இருந்தார்கள். அவர்களுடன் திருவாதிரைக்களி, ஒப்பனை, குழு நாடகம் ஆயவற்றில் பெண்ணாக வேடமிட்டு நடித்திருக்கிறேன்.

சில வருடங்கள் கழித்து பெண்ணாக மாற முடிவு செய்தேன். அது என்னுடைய உறவினர்களை அதிர்ச்சியடையச் செய்தது. நான் கட்டுப்பாடான முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன். இத்தனை நாட்களாக கோயம்புத்தூரில் வசித்தேன். இப்போதுதான் பெரும்பாலான உறவினர்கள் என்னை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

'பேரன்பு' படம் மலையாளத்திலும் உருவாகி வருகிறது. மற்றுமொரு தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்'' என்னும் அஞ்சலியின் முகத்தில் மிளிர்கிறது அழகும், தன்னம்பிக்கையும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x