ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி செலவு: பிரபாஸின் புதிய படக்குழு திட்டம்

ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி செலவு: பிரபாஸின் புதிய படக்குழு திட்டம்
Updated on
1 min read

பிரபாஸின் அடுத்த படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இதில் ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டும் அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் 'பாகுபலி 2' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ். இப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் தான் அடுத்த படத்தை ஒப்புக் கொள்வது என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது 'பாகுபலி 2' படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ரூ.150 கோடி பட்ஜெட்டில், ரூ.35 கோடி ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டுமே செலவிடப்படும். தெலுங்கு சினிமாவில் ஒரு சண்டைக்காட்சிக்கு செலவழிக்கப்பட்டும் அதிகபட்ச தொகை இது. நிறைய கார்களும், ஆக்‌ஷனும் நிறைந்த, 20 நிமிட சேஸிங் காட்சி இது. இப்படத்துக்கு ஷங்கர் - எஹ்ஸான் - லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்தியிலும் வெளியாகவுள்ளதால் பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இது ஒரு பயணம் சார்ந்த காதல் படம் என்பதால் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. 'பாகுபலி 2' உடன் படத்தின் டீஸரை இணைக்கலாம் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in