

அபிநந்தன் தைரியத்துக்கும், நிதானத்துக்கும் தலை வணங்குகிறேன் என்று தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் கொரட்டாலா சிவா தெரிவித்துள்ளார்.
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன்.
அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர் கொரட்டாலா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய விமானப் படை விமானி கமாண்டர் அபிநந்தன், தனது தாய் மண்ணுக்காக உயர்ந்த வீரத்தையும், அன்பையும் காட்டியுள்ளார். அவரது இணையில்லாத தைரியத்துக்கும், நிதானத்துக்கும் தலை வணங்குகிறேன். நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா. நீங்கள் பாதுகாப்பாகத் திரும்பக் காத்திருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.