ராஜமெளலி படத்தில் கவுரவ வேடத்தில் அஜய் தேவ்கன்

ராஜமெளலி படத்தில் கவுரவ வேடத்தில் அஜய் தேவ்கன்
Updated on
1 min read

ராஜமெளலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க அஜய் தேவ்கன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. இதன் படப்பிடிப்பு 2018, நவம்பர் 19-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது.

முதற்கட்டப் படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார் ராஜமெளலி. சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை டி.வி.வி. தான்யா தயாரித்து வருகிறார். தற்போது ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கவுரவக் கதாபாத்திரத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. 'இந்தியன் 2' படத்தில் நடிக்க நோ சொன்னவர், ராஜமெளலி இயக்கும் படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கவுரவக் கதாபாத்திரம் தான் என்பதால் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளதாக அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'நான் ஈ' இந்திப் பதிப்புக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன். அப்படத்திலிருந்தே ராஜமெளலி -  அஜய் தேவ்கன் இருவரும் நட்பாகப் பழகி வருகிறார்கள்.

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கதை விஜயேந்திர பிரசாத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், கிராபிக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி, வசனம் சாய் மாதவ் புரா - கார்க்கி, திரைக்கதை மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்று பணியாற்றி வருகிறார்கள்.

‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இப்படத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in