

‘டாக்ஸிவாலா’ படம் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளியானதால், விஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் சூர்யா.
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ் மட்டுமின்றி, இந்தியிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படமும் சூப்பர் ஹிட்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான ’நோட்டா’ படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
‘கீதா கோவிந்தம்’ படத்தைத் தொடர்ந்து ‘டாக்ஸிவாலா’ என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. ராகுல் சங்கிரிட்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரியங்கா ஜவால்கர், மாளவிகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (நவம்பர் 16) ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. படம் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளியானதால், படக்குழுவினர் மட்டுமின்றி, திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
“நான் சோர்வடையும்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவது யார் தெரியுமா? நீங்கள் தான். எல்லா கூச்சல்களுக்கு நடுவிலும், உங்கள் அன்பு எனக்கு சத்தமாகக் கேட்கிறது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
அதை ரீ ட்வீட் செய்துள்ள சூர்யா, “எங்கள் அனைவரின் அன்பும் உங்களுக்குண்டு. இதுவும் கடந்து போகும். ஆனால், நீங்கள் இங்கு நிலைத்திருக்கப் போகிறீர்கள். ‘டாக்ஸிவாலா’ படத்தை எதிர் நோக்குகிறேன்” என ஆறுதல் தரும் வகையில் கூறியுள்ளார்.